» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாலியல் பலாத்கார வழக்கு: சாகும் வரை சிறை தண்டனையை எதிர்த்து காசி மேல்முறையீடு!
வெள்ளி 22, டிசம்பர் 2023 5:28:05 PM (IST)
பாலியல் பலாத்கார வழக்கில் சாகும் வரை சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவில் வாலிபர் காசி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர், சுஜி என்ற காசி. இவர், சமூக வலைத்தளம் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுகுறித்து சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் கோட்டாறு, வடசேரி மற்றும் நேசமணி நகர் காவல் நிலையங்கள், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து கடந்த 2020-ல் காசி கைது செய்யப்பட்டதுடன் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், காசியின் லேப்டாப், செல்போனில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆயிரக்கணக்கில் நிர்வாண படங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவரும் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், நாகர்கோவில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில், கடந்த ஜூன் மாதம் நாகர்கோவில் மகிளா கோர்ட்டு காசிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து, காசி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு நேற்று நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.