» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!
வியாழன் 14, டிசம்பர் 2023 8:17:22 AM (IST)
கன்னியாகுமரி அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் கொட்டாரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கும், கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த பாண்டு மகள் காயத்ரிக்கும் (32) கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காயத்ரி வீட்டில் உள்ள ஒரு அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்ரி தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிறகு அவர் தற்கொலை செய்த அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.
தற்கொலைக்கு முன்பு காயத்ரி குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதே சமயத்தில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.