» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய வாலிபர் குண்டா் சட்டத்தில் கைது!
புதன் 13, டிசம்பர் 2023 8:25:31 AM (IST)
இளம்பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே மணலிக்கரை புதூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டேன்லி பிரின்ஸ் (32), இவர் பி.எட்., படித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு கவரிங் நகைக் கடையில் வேலை செய்து வந்தார். அந்த கடைக்கு தக்கலை பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் அடிக்கடி வருவதுண்டு. இதனால் ஸ்டேன்லி பிரின்சுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் ஸ்டேன்லி பிரின்சும், இளம்பெண்ணும் ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு கருங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமாகி சில மாதங்களில் ஸ்டேன்லி பிரின்சின் நடவடிக்கைகள் பிடிக்காததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்டேன்லி பிரின்ஸ், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பி சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ஸ்டேன்லி பிரின்சை போலீசார் கைது செய்தனர்.
அதே சமயம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய கல்லூரி பேராசிரியை ஒருவரின் செல்போன் எண்ணிற்கும் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஸ்டேன்லி பிரின்ஸ் அனுப்பி உள்ளார். மேலும் தன்னிடம் பேச வேண்டும் இல்லாவிட்டால் ஆபாசமாக சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக கல்லூரி் பேராசிரியையும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்
அதைத்தொடர்ந்து போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஸ்டேன்லி பிரின்ஸ் குற்றச்செயலர்களில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், ஆட்சியர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று குண்டர் சட்டத்தில் ஸ்டேன்லி பிரின்சை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து ஸ்டேன்லி பிாின்சை குண்டர் சட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.