» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை : மர்ம ஆசாமிகள் கைவரிசை
வியாழன் 7, டிசம்பர் 2023 8:38:26 PM (IST)
குளச்சல் அருகே தனியார் பள்ளி அலுவலக ஊழியர் வீட்டில்12 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
குமரி மாவட்டம்,குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை முக்காடு கடம்பன் விளையை சேர்ந்தவர் சுகாசினி (வயது39). இவர் கணவரை விட்டு பிரிந்து மகனுடன் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் நேற்று காலையில் சுகாசினி வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு மகனுடன் பள்ளிக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் பின்பக்க கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுகாசினி படுக்கை அறையில் சென்று பார்த்தார். அங்கு பீரோ பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும், சுகாசினி திருடர்களுக்கு பயந்து நகைகளை ஒரு ஹாட் பாக்சில் அடைத்து பீரோ அருகே உள்ள நாற்காலியில் துணிகளுக்கு இடையே வைத்திருந்தார். அவர் அந்த இடத்தில் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த 12 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகை வைத்திருந்த ஹாட் பாக்ஸ் காலியாக இருந்தது. இதுகுறித்து சுகாசினி குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுகாசினி பள்ளிக்கு சென்ற பின்பு மர்ம நபர்கள் வீட்டின் மாடி படிக்கு மேலே போடப்பட்டிருந்த ஆஸ்பெக்டாஸ் கூரையை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் நகைகளை கொள்ளையடித்து விட்டு வீட்டின் பின் கதவை திறந்து தப்பி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.