» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தொழிலதிபர் கொலை : வருங்கால மனைவி, காதலன் கைது!

புதன் 24, ஜூன் 2026 11:07:28 AM (IST)

புனேயில் மலையேற்றம் சென்ற போது 400 அடி பள்ளத்தில் விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்த விவகாரத்தில், அவரை அவரது வருங்கால மனைவியும் காதலனும் சேர்ந்து திட்டமிட்டுக் கீழே தள்ளிக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது!

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (26). குடும்பத்தினர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநரான இவருக்கும், சியா கோயல் என்ற பெண்ணுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சியா கோயல் தனது பிறந்தநாளைக் கொண்டாட புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் உள்ள லோகா காட் கோட்டை மலைப்பகுதிக்கு வருமாறு கேதன் விஷாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஜூன் 18 அன்று அங்குச் சென்ற கேதன் விஷால், சியா கோயலுடன் மலையேற்றம் செய்துள்ளார். அப்போது அவர்களுடன் நண்பர் என்ற பெயரில் மற்றொரு வாலிபரும் சேர்ந்து கொண்டுள்ளார்.

செங்குத்தான பாறையில் நின்று புகைப்படம் எடுத்த போது, கேதன் விஷால் நிலைதடுமாறி 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறி, சியா கோயல் போலீசில் விபத்து வழக்காகப் பதிவு செய்ய வைத்தார். போலீஸ் விசாரணையின் போது சியா கோயல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், சியா கோயல் சேத்தன் சவுத்ரி (22) என்ற வாலிபரை நீண்டநாட்களாகக் காதலித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேத்தன் சவுத்ரியைப் பிடித்துப் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலைக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. சியா கோயலுக்குக் கேதன் விஷாலைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரைத் தீர்த்துக்கட்ட சியா கோயலும் அவரது காதலன் சேத்தன் சவுத்திரியும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். 

அதன்படியே, பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மலைக்கு வரவழைத்துப் புகைப்படம் எடுப்பது போல நடித்து, 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory