» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!

செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிருப்தி குழுவினர் அறிவித்துள்ளனர். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் பிளவுகளும் பூசல்களும் உச்சமடைந்துள்ளன. தற்போது 58 அதிருப்தி எம்எல்ஏக்களும், 20 அதிருப்தி எம்பிக்களும் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் நேற்று மாலை அதிருப்தி எம்எல்ஏக்கள் நடத்திய சிறப்புக் கட்சிக் கூட்டத்தில், மமதா பானர்ஜியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரிதபிரத பானர்ஜி, கட்சியின் அரசியலமைப்பு 20-வது பிரிவின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய செயற்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், கடந்த பிப்ரவரியுடன் பழைய செயற்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மமதா பானர்ஜி இனி கட்சியின் ஆலோசகராகச் செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.

புதிய செயற்குழு தேர்வு: 

இந்தச் சிறப்புக் கூட்டத்தில் புதிய தேசிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. அப்போது கட்சியின் புதிய தலைவராக மூத்த எம்எல்ஏ அரூப் ராய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து மமதா பானர்ஜி தரப்பு மூத்த தலைவர் குணால் கோஷ் கூறுகையில், இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கோ அல்லது கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பை மாற்றுவதற்கோ அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னதாக, அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான 440 கோடி ரூபாய் இருப்பு உள்ள 3 வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க காவல்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory