» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: சர்ச் தலைவர்கள் 3 பேர் பலி;தேசிய நெடுஞ்சாலை மூடல்!

வியாழன் 14, மே 2026 4:45:41 PM (IST)

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் இனக்கலவரங்களுக்கு இடையே, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சர்ச் தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், சுராசந்த்பூர் மாவட்டம் லம்கா பகுதியில் நடைபெற்ற ‘தடோவ் பேப்டிஸ்ட் அசோசியஷன்’ (Thadou Baptist Association) நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரண்டு வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனங்களை வழிமறித்துச் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் 3 சர்ச் தலைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனங்களில் இருந்த மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணிப்பூர் மற்றும் நாகாலாந்தை இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை-2 (NH-2)-ஐ பாதுகாப்புப் படையினர் உடனடியாக மூடினர். குற்றவாளிகளைப் பிடிக்க அப்பகுதி முழுவதும் தீவிர ரோந்துப் பணியும், தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பிற பகுதிகளுடனான சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தடோவ் சமூகத்தினர் வேதனை:

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளரும் தடோவ் சங்கத் தலைவருமான மைக்கேல் லாம்ஜாதாங் தடோவ் கூறுகையில்:    "தடோவ் சமூகத்தினர் தனித்துவமானவர்கள்; எங்களுக்கும் குகி பழங்குடியினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், மணிப்பூர் வன்முறையில் எங்களையும் குகி என்று தவறாகப் புரிந்துகொண்டு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தற்போது எங்களது சர்ச் தலைவர்கள் கொல்லப்பட்டது பெரும் வேதனையை அளிக்கிறது," என்றார்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மதத் தலைவர்கள் மீதான இந்தத் தாக்குதல் அம்மாநிலத்தில் மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory