» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: இதுவரை 15 பேர் கைது - சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

புதன் 13, மே 2026 3:34:06 PM (IST)

மே 3-ஆம் தேதி நீட் தேர்வு தொடங்குவதற்கு சுமார் 45 மணி நேரத்திற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை, வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதையடுத்து தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையில் பல மாநிலங்களைத் தழுவிய மாபெரும் மோசடி நெட்வொர்க் அம்பலமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே தனது தந்தைக்கு 'Guess Paper' (உத்தேச வினாத்தாள்) என்ற பெயரில் ஒரு PDF கோப்பை அனுப்பியுள்ளார். தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர்கள் அந்தப் பக்கங்களை உண்மையான வினாத்தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, வேதியியலில் 45 கேள்விகளும், உயிரியலில் 90 கேள்விகளும் அப்படியே (Word-to-word) பொருந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே விசாரணையின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

தேர்வு தொடங்குவதற்கு சுமார் 45 மணி நேரத்திற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தொடங்கிய இந்த வினாத்தாள் கசிவு, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குக் காட்டுத்தீ போலப் பரவியுள்ளது.

இந்த மோசடியின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் (30) என்ற ஆயுர்வேத மருத்துவ மாணவரைச் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் புனேவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு வினாத்தாளை வாங்கி, அதை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். தலைமுடியைக் குறைத்துத் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்ற இவர், ஒரு கோயிலுக்குச் சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.

தொழில்நுட்ப மோசடி: வினாத்தாள்கள் 'Encrypted Messaging Apps' மற்றும் டெலிகிராம் மூலமாகப் பகிரப்பட்டுள்ளன. போர்ட்டபிள் ஸ்கேனர்கள் மற்றும் 'Shadow' சர்வர்கள் மூலம் ரகசியமாகத் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதுவரை மணிஷ் யாதவ், ராகேஷ் மாண்ட்வாரியா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவுக்கு நீளும் விசாரணை: கேரளாவில் மட்டும் சுமார் 200 மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் முன்கூட்டியே அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ அதிகாரிகள் கேரளா விரைந்துள்ளனர். இந்த வினாத்தாள் கசிவு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், முறையான மறுதேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory