» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவின் மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரவிஷா. இவர் கடந்த 2014 ஜூன் 18ல் தன் கிராமத்தில் இருந்து அரசிகரே நகருக்கு காரில் சென்றார். உடன் பெற்றோர், சகோதரி மற்றும் குழந்தைகள் பயணித்தனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ரவிஷாவின் இறப்புக்கு 'தேர்ட் பார்ட்டி' எனப்படும், மூன்றாம் தரப்பினருக்கான பிரிவின் கீழ் 80 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரின் மனைவி, மகன் மற்றும் பெற்றோர் அரசிகரேயில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த தீர்ப்பாயம், அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்பட அவரே காரணமாக இருந்துள்ளார். எனவே அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு பெறுவதற்கு உரிமை இல்லை' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயிரிழந்த ரவிஷாவின் குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரணையின் போது, 'ரவிஷா ஓட்டிச்சென்ற கார் அவருடையது இல்லை. அதை கடனாக வாங்கிச் சென்றார். எனவே, காப்பீட்டு நிறுவனம் இறப்புக்கான இழப்பீடு தொகையை மறுக்கக் கூடாது' என வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 'வேறொருவரின் வாகனத்தை வாங்கி ஓட்டும் போது, அவரும் வாகன உரிமையாளராகவே கருதப்படுகிறார்.

எனவே, வாகன உரிமையாளர் அல்லது வாகனத்தை கடன் வாங்கியவரின் சொந்த அலட்சியத்தால் ஏற்படும் இறப்பு அல்லது காயங்களுக்கு காப்பீடு நிறுவனத்தை பொறுப்பாக்க முடியாது' எனக் கூறி விபத்து இழப்பீடுக்கான தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில், ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் மகாதேவன் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இறந்தவர் அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்று போலீசாரின் குற்றப்பத்திரிகை தெளிவாகக் கூறுகிறது.

'எனவே அவரது வாரிசுகள் இழப்பீடு கோர உரிமையற்றவர்கள். காப்பீடு நிறுவனமும் இத்தகைய இறப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. உயர் நீதிமன்ற முடிவில் தலையிடுவதற்கு தகுந்த காரணம் எதுவும் இந்த வழக்கில் இல்லை' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory