» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கல்வீச்சில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி: மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்!
திங்கள் 15, ஏப்ரல் 2024 3:31:28 PM (IST)
கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த சனிக்கிழமை அன்று விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள சிங் நகர், விவேகானந்தா பள்ளி மையம் அருகே அவர் பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்திலிருந்த மர்ம நபர், திடீரென ஜெகன் மோகன் ரெட்டியை நோக்கி கல் வீசினார்.
இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடதுபக்க நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பிரச்சாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் நேற்று ஒரு நாள், ஜெகன்மோகன் ரெட்டி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவர் விஜயவாடா, கேசரப்பள்ளியில் இருந்து இன்று மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.