» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா
ஞாயிறு 10, மார்ச் 2024 10:15:37 AM (IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மும்முரமாக இயங்கி வருகின்றன.
இதைப்போல தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரிகளும் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய தேர்தல் ஆணையல் அங்கம் வகிக்கும் தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அதை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அருண் கோயல் பதவி விலக காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 1985-ம் ஆண்டு பஞ்சாப் பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் ஆணையல் இணைந்தார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருந்தது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண் கோயல் ஆகிய 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையல், அனுப் பாண்டே கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். தற்போது அருண் கோயலும் பதவி விலகியிருப்பதால், தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையல் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.