» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் 2029ல் வீழ்த்துவோம்: கெஜ்ரிவால்
ஞாயிறு 18, பிப்ரவரி 2024 8:46:50 AM (IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும், 2029-ம் ஆண்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் 5 முறை சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால், 6-வது முறையும் சம்மன் அனுப்பியது.
இதனிடையே தனது அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேரம் பேசப்படுவதாகவும் பா.ஜனதா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில் சட்டசபையில் தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க, டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டசபையில் நேற்று முன்தினம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
தீர்மானத்தின் மீது அவர் பேசும்போது, ஆம் ஆத்மி கட்சி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் அனைத்து தரப்பில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும், 2029-ம் ஆண்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம் என்றார்.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது டெல்லி சட்டசபையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. அப்போது ஆம் ஆத்மி கட்சியின் 62 எம்.எல்.ஏ.க்களில் 54 பேர் கலந்து கொண்டனர். சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 70. இதில் 54 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், நம்பிக்கை தீர்மானத்தில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.
முன்னதாக பேசிய முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சி விலகவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் சிறையில் உள்ளனர். சிலர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். சிலர் வெளியூரில் உள்ளனர். என்னை கைது செய்வதன் மூலம், எங்களை அடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள். நீங்கள் என்னை கைது செய்யலாம். எனது எண்ணங்களை முடக்கமுடியாது என்று கூறினார்.