» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அஸ்வின் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் : பிரதமர் மோடி வாழ்த்து
சனி 17, பிப்ரவரி 2024 10:17:59 AM (IST)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமரின் வாழ்த்துச்செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் சாதனை படைத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரின் பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எடுத்தார். அவர் தனது 98வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அதேசமயம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் ஆவார்.
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே முதல் இடத்தில் உள்ளார். முன்னதாக அஸ்வினை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திய நிலையில் தற்போது பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.