» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுலுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!
புதன் 24, ஜனவரி 2024 5:07:23 PM (IST)
பாரத் ஒற்றுமை யாத்திரையில் ராகுலுக்கும், அவரது பயண குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியிருப்பதாவது: அசாமில் காங்கிரசாருடன் போலீசார் தள்ளுமுள்ளு நடத்தியுள்ளனர். ராகுல் பிரசார வாகனம் அருகே பா.ஜ.,வினர் வேண்டுமென்றே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பல பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் பிரச்னைகள் அனைத்திலும் அஸ்ஸாம் காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். பாஜகவினரை அவர்கள் தடுக்கவில்லை' எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த வன்முறைச் சம்பங்களை நிரூபிக்கும் காணொலி ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் இருந்தும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் தலையிட்டு, அஸ்ஸாம் முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் காங்கிரஸ் நடைபயணத்திற்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய கார்கே கடிதத்தில் அமித்ஷாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுலுக்கும், அவரது பயண குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீங்கள்(அமித்ஷா) உடனே தலையிட்டு அசாம் முதல்வர் மற்றும் டிஜிபிக்கு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.