» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோவை-பெங்களூரு வந்தே பாரத் உள்பட 8 ரயில்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஞாயிறு 31, டிசம்பர் 2023 10:22:19 AM (IST)
அயோத்தியில் கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் உள்பட 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அங்குள்ள அயோத்திதாம் ரயில் நிலையம் ரூ.240 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அமைந்துள்ள அந்த ரயில் நிலைய திறப்பு விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு விழா ஆகியவை நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று புதுடெல்லியில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து கார் மூலம் அயோத்தி தாம் ரயில் நிலையத்துக்கு வந்தார். வழியில் அவருக்கு இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அயோத்தி தாம் ரயில் நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி, மறுசீரமைப்பு செய்யப்பட்ட அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து, அதனை சுற்றிப் பார்த்தார். பின்னர் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற விழாவில் தர்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹார் இடையேயும், மால்டா நகர்- பெங்களூரு இடையேயும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவை-பெங்களூரு, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி, அமிர்தசரஸ்-டெல்லி, மங்களூரு-மட்கான், ஜல்னா-மும்பை ஆகிய 6 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அம்ரித் பாரத் ரயிலில் ஏறிய பிரதமர் மோடி, அதில் இருந்த பயணிகளிடம் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பிரமாண்டமான வீணை நிறுவப்பட்டுள்ள லதா மங்கேஷ்கர் சவுக்கை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது லதா மங்கேஷ்கர் பாடிய பக்திப் பாடல் இசைக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரபிரதேசத்தில் ரூ.15,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். புதிதாக கட்டப்பட்ட விமானநிலையத்தையும் திறந்து வைத்தார். அயோத்தியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் அனைந்தும், வருகிற 22-ந்தேதி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை விழாவுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.