» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழுத்தாளர் பூமணி மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - முதல்வர் விஜய் அறிவிப்பு!

திங்கள் 13, ஜூலை 2026 10:29:32 AM (IST)

cmvijayPoomani.jpg

மறைந்த மூத்த எழுத்தாளர் பூமணி உடலுக்குத் தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளியுமான பூமணி (இயற்பெயர்: பூலித்துரை மாணிக்கவாசகம், 79 ஆண்டுகள்) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். இவரது உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச்சடங்குகள் கோவில்பட்டியில் நடைபெறும் என அவரது உறவினரும் எழுத்தாளருமான சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

பூமணியின் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி பூமணி எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காகச் சாகித்ய அகாதெமி விருது பெற்றது அவரது இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம் அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், எழுத்தாளர்களுக்கும், இலக்கிய உலகினருக்கும் ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், பூமணியின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இலக்கியம் மற்றும் திரைத்துறைப் பங்களிப்பு:

1966 ஆம் ஆண்டு முதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த பூமணி, 1979 முதல் நாவல்களை எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவல் 'பிறகு' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் ஆகிய முக்கிய நாவல்களை எழுதினார். 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சிவகாசி சாதிக் கலவரம் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்த இவரது 1,100 பக்கங்கள் கொண்ட 'அஞ்ஞாடி' நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

திரைத்துறையில் 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை பூமணி இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து 2019 இல் வெளியான 'அசுரன்' திரைப்படத்திற்கு இவரது 'வெக்கை' நாவலே மூலக்கதையாக அமைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory