» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் இணைய வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளி 20, மார்ச் 2026 12:44:44 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்னும் நான்கு நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று (மார்ச் 19) இரவு சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: "தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்துவிட்டன. புதிய கட்சிகள் எதுவும் இணைய வாய்ப்பில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவிதமான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக வரும் செய்திகள் உண்மையில்லை. யாருக்கு எந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அதன் அடிப்படையிலேயே தொகுதிப் பங்கீடு செய்யப்படுகிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அனுபவம் கொண்ட கட்சி. தற்போது தேர்தல் களத்தில் அதிமுக விரைவு ரயில் போல வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். விரைவில் அவர் மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார்," எனத் தெரிவித்தார்.

அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 20) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளனர். இதன்பின் ஒட்டுமொத்தக் கூட்டணியின் தொகுதிப் பட்டியல் வெளியாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory