» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென்மண்டல ஐஜி விளக்கம்!

வெள்ளி 20, மார்ச் 2026 11:53:37 AM (IST)

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில், எவ்வித நேரடித் தடயங்களும் இல்லாத சூழலில், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வ விசாரணையின் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்ட விபரத்தைத் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி விவரித்துள்ளார்.

மார்ச் 11-ஆம் தேதி மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. கூடுதல் டிஜிபி தலைமையில் உயர் அதிகாரிகள் முகாமிட்டு, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. சுமார் 150 காவலர்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த 98 கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. சுமார் 2,524 செல்போன் எண்களின் 2,500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் நுணுக்கமாகப் பரிசோதிக்கப்பட்டன.

சந்தேகத்திற்குரிய 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதில் 5 பேரின் டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், சம்பவ இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் திடீரென மறைந்தது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அருகில் இருந்த காற்றாலை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருப்பதும், அது பார்த்திபனூரில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர்களின் பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்மமுனீஸ்வரன் (எ) மாவீரன் அடையாளம் காணப்பட்டார். 

ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், உயர் நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து, தினமும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திடும் நிபந்தனையின் கீழ் இருந்துள்ளார்.

தனிப்படையினரால் பிடிக்கப்பட்ட தர்மமுனீஸ்வரனிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் மாணவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். "தகவல் சேகரிப்பு, நுணுக்கமான விசாரணை மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வு இருந்தால், தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று," என்று ஐஜி விஜயேந்திர பிதாரி பெருமிதத்துடன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory