» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் : பெண் விஏஓ கைது! – உதவியாளரும் சிக்கினார்!
வியாழன் 4, ஜூன் 2026 8:43:57 AM (IST)
சேரன்மாதேவியில் நிதி நிறுவனத்திற்கான உரிமத்தைப் புதுப்பித்து வழங்குவதற்கு ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் மூக்காண்டி. இவர் அப்பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்திற்கான வணிக உரிமத்தை நடப்பு ஆண்டிற்குப் புதுப்பிப்பதற்காக, சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் இதயக்கனியிடம் மூக்காண்டி முறைப்படி விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி, உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமானால் தனக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று கறாராகக் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூக்காண்டி, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ. 10,000 ரொக்கப் பணத்தை மூக்காண்டியிடம் கொடுத்து, அதனை வி.ஏ.ஓ.விடம் வழங்குமாறு அறிவுறுத்தி அனுப்பினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி, மூக்காண்டி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்கு அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனியின் அறிவுறுத்தலின்படி, அவரது உதவியாளரான வெங்கடேசனிடம் மூக்காண்டி லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அலுவலக வளாகத்தைச் சுற்றி மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட வெங்கடேசன் மற்றும் லஞ்சம் கோரிய அதிகாரி இதயக்கனி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் அலுவலர் இதயக்கனி மற்றும் உதவியாளர் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ அலுவலகத்திலேயே வைத்துப் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களது கைகளில் ரசாயனச் சோதனை நடத்தப்பட்டு லஞ்சம் வாங்கியது உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். சேரன்மாதேவியில் அரசு பெண் அதிகாரி லஞ்ச வழக்கில் கைதான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் குழு : அமைச்சர் ரமேஷ் உத்தரவு
சனி 6, ஜூன் 2026 9:10:18 AM (IST)

தூத்துக்குடியில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு: மீன்பிடி தகராறில் கொடூரம்!
சனி 6, ஜூன் 2026 8:56:30 AM (IST)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை: தர்மமுனீஸ்வரன் மேல்முறையீடு செய்ய அவகாசம்!
சனி 6, ஜூன் 2026 8:50:49 AM (IST)

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" நயினார் நாகேந்திரன் பேட்டி
வெள்ளி 5, ஜூன் 2026 4:47:36 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி : புதிய அரசியல்... புதிய பாதை! – அண்ணாமலை அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 3:47:51 PM (IST)


