» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை: தர்மமுனீஸ்வரன் மேல்முறையீடு செய்ய அவகாசம்!

சனி 6, ஜூன் 2026 8:50:49 AM (IST)

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தர்மமுனீஸ்வரன் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். மறுநாள் அங்குள்ள புதருக்குள் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அம்மாணவி மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் புலனாய்வில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

விசாரணையில், இவர் ஏற்கனவே ஒரு மூதாட்டியைப் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டை பெற்றவர் என்பதும், ஜாமீனில் வெளியே வந்திருந்த போதே இந்த பிளஸ்-2 மாணவியையும் பின்தொடர்ந்து படுகொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மிக அதிவேகமாக விசாரணை நடத்தப்பட்டது. 

குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், தர்மமுனீஸ்வரனுக்குக் கடுமையான தூக்குத்தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.

சட்ட விதிகளின்படி, இந்த மரண தண்டனையை உறுதி செய்வது மற்றும் நிறைவேற்றுவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக, வழக்கின் அனைத்து முதன்மை ஆவணங்களையும் விளாத்திகுளம் போலீசார் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இக்கோப்புகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று நேரில் ஆய்வு செய்து விரிவான விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள், "பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தர்மமுனீஸ்வரன், தனக்கு விதிக்கப்பட்ட இந்த உச்சபட்சத் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குச் சட்டப்படியான போதிய கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்குகிறது. இதன் காரணமாக, இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது," எனத் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory