» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்

சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவருக்கு மூன்று ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த புகாரில், பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானவேல் பாபுவை (50) போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டைச் சேர்ந்த ஞானவேல் பாபு, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அதே பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் மாணவி கூறியிருப்பதாவது: ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, ஒருவரின் அறிமுகம் மூலம் பேராசிரியர் ஞானவேல் பாபு உதவ முன்வந்தார். நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரவும், கல்வி உதவித்தொகை பெறவும் அவர் உதவினார். இதனால் அவர் மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு இருந்தது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது அணுகுமுறை மாறியது. எனது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகப் பேசினார். மேலும், ஆபாசமான வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்தார். நான் கண்டித்தும் கேட்காமல், கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார்."

மாணவியின் புகாரை அடுத்து, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீசார் வருவதை அறிந்த ஞானவேல் பாபு, கோட்டூர்புரத்தில் உள்ள தனது குடியிருப்பிலிருந்து தலைமறைவானார். அவரைப் பிடிக்கக் காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், ஞானவேல் பாபு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் ஞானவேல் பாபுவைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அவர் மீது மேலும் சில மாணவிகள் புகார் அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பேராசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பு நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory