» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அழகு நிலையத்தில் அத்துமீறல்: பெண்களை மிரட்டி பணம் பறித்த 2 போலீசார் அதிரடி கைது!

சனி 28, மார்ச் 2026 8:47:58 AM (IST)

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லை வந்த ஆயுதப்படை காவலர்கள் இருவர், சீருடையில் சென்று ஒரு அழகு நிலையத்தில் பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பெண் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது காவலர் சீருடையில் வந்த இருவர் அழகு நிலையம் முன்பாக நின்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாகப் புகார் வந்துள்ளது; நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.10,000 தர வேண்டும்" என மிரட்டியுள்ளார். மேலும், ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தியதால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அங்கிருந்த ரூ.10,000 பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து அழகு நிலைய உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தேர்தல் பணிக்காக வந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் என்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, பிரான்சிஸ் (34), மற்றும் நெல்லை செந்தில்நகர், சேதுபதிராஜா (27) என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லைக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்திற்குப் பாதகம் விளைவித்தல், பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory