» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரையை விட தரையில் அதிகம் நடிக்கிறார்: விஜய் மீது சீமான் கடும் சாடல்!

சனி 28, மார்ச் 2026 11:03:11 AM (IST)

விஜய் இன்னும் நடிப்பதை நிறுத்தவில்லை. திரையை விட இப்போது தரையில் (அரசியலில்) அதிகம் நடிக்கிறார் என்று சீமான் விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியினரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அரசியல் விமர்சகர் பொன்ராஜ், பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, தவெக தலைவர் விஜய் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய சீமான், "தன்னையும் மற்ற நடிகர்களின் குடும்பங்களையும் தவெகவினர் இழிவாகப் பேசியதற்கு விஜய் மீது நான் புகார் அளிக்கலாமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது: "தவெக-வைச் சேர்ந்தவர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மிகக் கேவலமாகப் பேசியுள்ளனர். தம்பி சிவகார்த்திகேயன் மற்றும் சகோதரர் அஜித் ஆகியோரின் குடும்பங்களைப் பற்றி இழிவான பதிவுகளை வெளியிட்டுள்ளனர். என் தங்கை சங்கீதாவையும், ஐயா ஸ்டாலினையும் இணைத்து அருவருக்கத்தக்க வகையில் சித்திரிக்கிறார்கள்.

இந்தப் பதிவுகள் எல்லாம் விஜய்க்கோ அல்லது அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்போது 'கண்ணியமற்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும்' என்று விஜய் ஒரு அறிக்கை விட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மட்டுமே, இப்போது பொன்ராஜ் மீது புகார் அளிக்க அவருக்குத் தகுதி இருந்திருக்கும்."

தொடர்ந்து பேசிய சீமான், தவெகவினர் மற்ற கட்சியைச் சேர்ந்த பெண்களைக் கேவலமாக எழுதுவதைச் சுட்டிக்காட்டினார். "இவற்றையெல்லாம் தொகுத்துப் புத்தகமாகப் போட்டுச் சமூகத்திற்குக் காட்டவா? அல்லது கமிஷனர் அலுவலகத்தில் விஜய் மீது புகார் கொடுக்கவா?" என்று ஆவேசப்பட்டார்.

மேலும், "விஜய் இன்னும் நடிப்பதை நிறுத்தவில்லை. திரையை விட இப்போது தரையில் (அரசியலில்) அதிகம் நடிக்கிறார். நியாயமானவராக இருந்தால் தன் கட்சியினர் ஆபாசமாகப் பேசுவதைக் கண்டித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காகவோ, உயிரிழந்தவர்களுக்காகவோ அவர் என்றுமே நேரில் வந்ததில்லை. 'உங்கள் விஜய் உயிரெடுக்கத் தான் வருகிறார்' என்பதுதான் தற்போதைய நிலைக்குச் சரியான பாட்டு" எனத் தாக்கிப் பேசினார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக-பாஜக கூட்டணிகளுக்கு இணையாக தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் சீமானின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory