» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்ட சங்கம் டி.யூ.ஜே. : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பெருமிதம்!
திங்கள் 22, நவம்பர் 2021 9:36:59 AM (IST)
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட சங்கம். அதனால் தான் இந்த சங்கம் சிறப்பாக இயங்கி வருகிறது என்று நாசரேத்தில் நடைபெற்ற டி.எஸ். ரவீந்திர தாஸ் அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் மறைந்த டி.எஸ். ரவீந்திர தாஸ் அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை வகித்தார். மாவட்ட கௌரவத்தலைவர் ஏ.எம்.விஜயராஜா முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் நாசரேத் நிக்சன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி ஆர்.முருகன் நன்றி கூறினார். முன்னதாக சங்கத்தின் கொடியை கலுங்குவிளை ஹெச்.போனிபாஸ் ஏற்றி நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார் மண்டல தலைவர் வேணுகோபால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரவீந்திரதாஸ் உருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் இந்த விழாவில் கலந்து கொண்டு டி.எஸ்.ரவீந்திர அவர்களின் படத்தை திறந்து வைத்து பேசுகின்ற வாய்ப்பு எனக்கு கிட்டியமைக்காக பெருமையடைகிறேன். ஏனென்றால் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட சங்கம். அதனால் தான் இந்த சங்கத்தில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களால் அதன் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. கத்தி முனையைவிட பேனா முனை வலிமையானது என பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியுள்ளார். நாம் செய்யும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அந்த பணி மிக சிறப்பாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக பேசிய, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவரும், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கிய டி.எஸ்.ஆர். அவர்களின் 75வது பிறந்த தின விழா கொண்டாடுவதில் மிக்க மகிச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களின் குரலாக டி.யூ.ஜே. இருந்து வருகிறது. தொடர்ந்து பத்திரிக்கையாளர் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
மாநில பொதுச்செயலாளர் கு.வெங்கட்ராமன், பொருளாளர் சேலம் ஏ.சேவியர், திண்டுக்கல் எம்.ராமகிருஷ்ணன் உட்பட பலர் தலைவர் டி.எஸ்.ஆர் அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பேசினர். குடும்பத்தின் சார்பில் மறைந்த தலைவரின் சகோதரர் டி.எஸ்.மகிமை தாஸ் நெகிழ்ச்சியுடன் பேசினார். நிகழ்வில் ஓட்டாப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இருதய ஞானரமேஷ், சாந்தகுமார், தேசியக்குழு உறுப்பினர்கள் கி.ம.சங்கர், அலெக்ஸ் புரூட்டோ, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.