» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை விழா ஆக.4-ம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 11:48:35 AM (IST)
கன்னியாகுமரியில் 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கும் தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனிதநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு செல்கிறார்கள். அங்கு தங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மட தந்தூரி சுஜித்சங்கரநாராயணரூ நடத்துகிறார்.
பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல மறுநாளில் இருந்து 15-ம்தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. இந்த களப பூஜை நிறைவடைந்த பிறகு மறுநாள் 16-ம்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:19:27 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:03:43 PM (IST)

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
சனி 2, ஆகஸ்ட் 2025 4:25:20 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:45:55 PM (IST)

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)
