» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நகைக்காக சிறுவனை கொடூரமாக கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை : கணவருக்கு 3 வருடம் சிறை!!
வெள்ளி 6, ஜூன் 2025 8:46:33 AM (IST)

நகைக்காக சிறுவனை கொடூரமாக கொன்று உடலை பீரோவில் மறைத்து வைத்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 வருடம் சிறை தண்டனையும் விதித்து தக்கலை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டார். இவருடைய மனைவி சகாய சில்ஜா (வயது 28). இந்த தம்பதியின் மகன் ஜோகன் ரிஷி (4). கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி வீட்டருகே அவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
பிறகு தாய் சகாய சில்ஜா, ஜோகன் ரிஷியை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றார். ஆனால் அங்கு சிறுவனை காணவில்லை. இதனால் அச்சமடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீடுகள் உள்பட அப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினார். ஆனால் சிறுவனை பற்றி எந்தவொரும் தகவலும் இல்லை. இதனால் உறவினர்களிடையேயும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுவன் 1 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் கைச்சங்கிலி மற்றும் வெள்ளியில் அரைஞாண் கயிறு அணிந்திருந்தான். இதனால் நகைக்காக யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்ற ரீதியில் விசாரணையை போலீசார் முடுக்கினர்.
சம்பவம் நடந்த மறுநாள் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா (35) என்ற பெண் மீது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது கணவர் சரோபினும் (37) விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். முதலில் பாத்திமா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர்.
இதில் நகைக்காக சிறுவனை கொன்று உடலை வீட்டு பீரோவில் மறைத்து வைத்த திடுக்கிடும் தகவல் வெளியே வந்தது. உடனே போலீசார் பாத்திமா வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு பீரோவை திறந்து சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனின் கழுத்தில் காயம் இருந்தது. வாயில் துணி அமுக்கப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது.
சிறுவன் சத்தமிடக்கூடாது என்பதற்காக வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்துக் பாத்திமா கொன்றது, இதன் மூலம் தெரியவந்தது. மேலும் சிறுவனின் நகையை எடுத்த பாத்திமாக அதை அடகு வைக்கவும் சென்றது விசாரணையில் அம்பலமானது. இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சகாய சரோபினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சிறுவனை கொடூரமாக கொன்ற பாத்திமா மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதே சமயத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2½ ஆண்டுகளாக தக்கலை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ராமச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளி பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலையை மறைக்க உதவிய அவரது கணவர் சகாய சரோபினுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாணவர் விடுதி : அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
வெள்ளி 6, ஜூன் 2025 5:50:21 PM (IST)

பக்ரீத் பண்டிகை : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
வெள்ளி 6, ஜூன் 2025 5:17:32 PM (IST)

பருவமழையை எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 6, ஜூன் 2025 4:58:15 PM (IST)

வைகாசி விசாகத் திருவிழா: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!
வெள்ளி 6, ஜூன் 2025 3:17:05 PM (IST)

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)

பேருந்து நிலையம், நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகள் : அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:59:38 PM (IST)
