» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை: மனைவியின் தம்பி கைது!

செவ்வாய் 12, மார்ச் 2024 5:23:56 PM (IST)

மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மனைவியின் தம்பியை போலீசார் கைது செய்தனர். 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விஜூ (24). இவர் அதே பகுதியை சேர்ந்த சவுமியா என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆட்ஷிக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜூ தினமும் குடித்துவிட்டு வந்து சவுமியாவிடம் தகராறு செய்து வந்தார். 

இதனால் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுமியா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு அவரது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனை அறிந்த விஜூ, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக மனைவி சவுமியா வீட்டுக்கு சென்றார். அப்போது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது சவுமியாவும் வருவதாக கூறினார்.

அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜூ குழந்தையை தனது சகோதரர் சிஜினுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சவுமியா மீண்டும் கணவனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த சவுமியாவின் 15 வயது சகோதரர் திடீரென வெட்டுக் கத்தியால் விஜூவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

ரத்த வெள்ளத்தில் இருந்த விஜூவை மீட்டு சிஜின் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு விஜூ நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிஜின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சவுமியாவின் 15 வயது சகோதரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரி சவுமியாவை விஜூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இது குறித்து எனது சகோதரி எனது குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று எங்கள் வீட்டில் வைத்து தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து கத்தியை எடுத்து விஜூவை வெட்டினேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory