» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் மோடி 15ஆம் தேதி குமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

செவ்வாய் 12, மார்ச் 2024 4:20:41 PM (IST)



பிரதமர் மோடி 15ஆம் தேதி குமரி வருகை தரவுள்ள நிலையில், பாஜக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். 

இந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் கணிசமான இடத்தை பிடிக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தது மட்டுமின்றி, பிரசாரத்திலும் ஈடுபட்டார். அவர் தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். 

இந்நிலையில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அவர் தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என்றும், கன்னியாகுமரியில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.  அன்றைய தினம் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

அப்போது அவர் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொதுக்கூட்ட திடலுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை சென்றனர். பந்தல் அமைப்பது, பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணி குறித்து அவர்கள் திட்டமிட்டனர். அந்த பணிகளை இன்று மாலை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டம் நடைபெறும் விவேகானந்தா கல்லூரி மைதானத்தை பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, பாலகணபதி மாவட்டத் தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் டாக்டர் முத்துராமன், ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மீனாதேவ், தேவ் சுபாஷ் கவுன்சிலர் சுனில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory