» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் : 6 அணிகளுக்கு மட்டுமே அனுமதி!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 10:53:50 AM (IST)

2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள் மட்டுமே கலந்து கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்குக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், போட்டி அமைப்பாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள் மட்டுமே கலந்து கொள்ளும் என உறுதி செய்துள்ளனர்.
ஆடவர் பிரிவில் 6 அணிகளும், மகளிர் பிரிவில் 6 அணிகளும் கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. இதில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் அணிகள் விளையாடி இருந்தன. இந்த இரு அணிகள் இரு நாட்கள் கொண்ட ஆட்டத்தில் மோதியிருந்தன.
இம்முறை லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவில் இடம் பெறுகிறது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம் பெறுவார்கள். இந்த வகையில் ஆடவர் பிரிவில் மொத்தம் 90 வீரர்களும், மகளிர் பிரிவில் மொத்தம் 90 வீராங்கனைகளும் இடம் பெற வேண்டும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய 12 நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக உள்ளன. இத்துடன் 94 நாடுகள் இணை உறுப்பினர்களாக உள்ளது.
2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான தகுதி அளவுகோல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் விளையாட்டை நடத்தும் உரிமையை பெற்றுள்ளதன் அடிப்படையில் அமெரிக்க அணி நேரடியாக தகுதி பெறக்கூடும். இதனால் 5 அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என கருதப்படுகிறது. இந்த 5 அணிகளும் ஒரு குறிப்பிட்ட கட்-ஆஃப் தேதிக்குள் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் தேர்வாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட், பேஸ்பால் உள்ளிட்ட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியைவிட 22 பதக்க போட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 351 பதக்க போட்டிகள் நடைபெறும். புதிதாக 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் 698 வீரர், வீராங்கனைகள் கூடுதலாக பங்கேற்பார்கள். வரலாற்றில் முதன்முறையாக, அனைத்து குழு விளையாட்டுகளிலும் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையிலான பெண்கள் அணிகள் இருக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிட்செல் சதம்: 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி
வியாழன் 15, ஜனவரி 2026 8:57:19 AM (IST)

வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் இணையும் மாற்று வீரர்...!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:40:51 AM (IST)

விராட் கோலி புதிய சாதனை: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி
திங்கள் 12, ஜனவரி 2026 8:25:58 AM (IST)

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

