» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி: சாதனை படைத்த மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு
திங்கள் 11, செப்டம்பர் 2023 8:01:43 AM (IST)
உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற விளையாட்டு வீரர் மகாராஜா. இவர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் பார்வையற்றோருக்கான உலக அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணியில் விளையாடினார். இப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெறுவதற்கு மகாராஜாவின் பங்களிப்பு இருந்தது.
இதை தொடர்ந்து மகாராஜாவை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் ஊக்கத் தொகை பெற்று தரவும், ஆங்கிலம் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளதுடம், கொரோனா காலத்தில் தந்தை இழந்த மகாராஜாவிற்கு அரசு பணி விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அவருக்கு மாணவரும், குடும்பத்தினரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.