» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் டி20 : 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி!
சனி 16, அக்டோபர் 2021 10:47:14 AM (IST)
14-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
துபையில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சென்னையின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டூ பிளெஸ்ஸிஸ், படிப்படியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயா்த்தினா். ஷகிப் அல் ஹசன் வீசிய 3-ஆவது ஓவரில் டூ பிளெஸ்ஸிஸை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தும், தினேஷ் காா்த்திக் தவறவிட்டாா்.
இது பின்னா் கொல்கத்தாவை முற்றிலும் பாதித்தது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்த ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணியை, சுனில் நரைன் 9-ஆவது ஓவரில் பிரித்தாா். சென்னை தரப்பில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தாா். கொல்கத்தா பௌலா்களில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா் மட்டும் ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் ஸ்கோா் செய்யாமலே அடுத்தடுத்து வீழ்ந்தன. ஷா்துல் 3 விக்கெட் சாய்த்து அசத்தினாா். டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.
கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் கூட்டணி சிறப்பாக துவக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 91 ரன்கள் சோ்த்த நிலையில், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் வெங்கடேஷ். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதீஷ் ராணா டக் அவுட்டாக, சுனில் நரைன் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். பின்னா் மோா்கன் 4, தினேஷ் 9, ஷகிப் 0, திரிபாதி 2 என விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்தது.சென்னை தரப்பில் ஷா்துல் தாக்குா் 3, ஜோஷ் ஹேஸில்வுட், ரவீந்திர ஜடேஜா தலா 2, தீபக் சாஹா், டுவைன் பிராவோ தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த டூப்பிளசிஸ்(86) ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வளர்ந்து வரும் வீரருக்கான விருது 635 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கப்பட்டது. ஃபேர் ப்ளை விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கேட்ச் பிடித்தவருக்கான விருத பஞ்சாப் கிங்ஸ் வீரர் ரவி பிஷ்னாய்க்கு வழங்கப்பட்டது.
இந்த சீசனிந் கேம் சேஞ்சர் விருதையும், அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியையும் ஆர்சிபி வீரர் ஹர்ஸல் பட்டேல் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனின் மதிப்பு மிக்க வீரருக்கான விருதும் ஹர்சல் படேலுக்கு வழங்கப்பட்டது. இந்த சீசனில் 635 ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை வென்றார். கடந்த சீசனில் அறிமுகமாகி, இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை கெய்க்வாட் வென்றிருக்கிறார்.
ஐபிஎல் 14-வது சீசனில் கோப்பையை வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் ரூ.20 கோடிக்கான காசோலோ பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வழங்கினார்.சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை வலுவாகத் திரும்பிவருவோம் என்று கூறிவிட்டு அதேபோல வந்து தங்களை நிரூபித்துள்ளது. கடந்த முறை இருந்த அணியில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாமல் உத்தப்பா இன்னும் சில இளம் வீரர்கள்எடுக்கப்பட்டனர். இதில் உத்தப்பா தன்னை ஏலம் எடுத்தது சரி என்ற ரீதியில் முதல் தகுதித்சுற்றிலும், பைனலிலும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திவிட்டார்.