» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!

சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

வீட்டுமனைப் பிரிவு ஒப்புதலில் முறைகேடு செய்து அரசுக்கு ரூபாய் 1 கோடியே 92 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில், களக்காடு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜன் மற்றும் முன்னாள் செயல் அலுவலர் முத்துக்குமார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் தற்போது களக்காடு நகராட்சி துணைத்தலைவராகவும், திமுக ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் களக்காடு பேரூராட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

அப்போது, தனிநபர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள 7¾ ஏக்கர் பரப்பளவிலான மலை சார்ந்த நிலத்தில் வீட்டுமனைகள் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். மலை சார்ந்த பகுதி என்பதால் விதிமுறைப்படி பெற வேண்டிய கட்டாயத் துறை அனுமதிகள் மற்றும் முறையான மனைப்பிரிவு ஒப்புதல்களைப் பெறாமலும், விதிகளின்படி அரசுக்கு ஒதுக்க வேண்டிய 10 சதவீதம் பொதுப் பயன்பாட்டு நிலத்தைப் பேரூராட்சிக்கு ஒப்படைக்காமலும், லஞ்ச முறைகேடுகள் மூலம் அந்த நிலத்திற்குப் போலி அனுமதி வழங்கியதாகப் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக அரசுக்குச் சுமார் ரூ.1 கோடியே 92 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது விசாரணையில் உறுதியானது.

இப்புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று, களக்காடு பேரூராட்சித் தலைவராக இருந்த ராஜன் மற்றும் அப்போது செயல் அலுவலராகப் பணியாற்றிய முத்துக்குமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் ராபின் ஞானசிங் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு, இந்த முறைகேடு தொடர்பாகச் சுமார் 24 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கை வலுவாக நடத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, ராஜன் மற்றும் முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூபாய் 31,000 அபராதமும் விதித்து நேற்று அதிரடித் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாரத ரத்னா ஆஜராகி வாதாடினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory