» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கோலாகல தொடக்கம்:ஜூன் 28-ல் பெருந்தேரோட்டம்!

சனி 20, ஜூன் 2026 10:40:35 AM (IST)


திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில், ஆனிப் பெருந்தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், ஆனிப் பெருந்தேர் திருவிழா மிக முக்கியத் திருவிழாவாகும். இத்திருவிழாவையொட்டி இன்று காலை கோவிலின் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆண்டுக்கான ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்வான பெருந்தேரோட்டம் வரும் ஜூன் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. அன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய ஐந்து தேர்களின் ஓட்டம் அடுத்தடுத்து நடைபெறும். ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பிரமாண்டமான தேர்களில் நெல்லையப்பர் கோவில் சுவாமி தேரும் ஒன்றாகும். எவ்வித நவீன எந்திரங்களின் உதவியும் இன்றி, முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே வடம் பிடித்து இழுக்கப்படும் வரலாற்றுப் பாரம்பரியம் இத்தேருக்கு உண்டு.

தேரோட்டத்தை முன்னிட்டு, சுவாமி நெல்லையப்பர் தேரில் பொருத்தப்பட்டுள்ள பாரம்பரியமிக்க மரத்தாலான சுவாமி சிலைகள் மற்றும் அலங்கார மரச் சிற்பங்களுக்குப் புதிய பளபளப்பான வண்ணங்கள் தீட்டும் பணிகளில் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அம்பாள் தேரில் சாரம் கட்டப்பட்டு, அலங்காரத் தட்டுகளும், குதிரை பொம்மைகளும் பொருத்தப்பட்டு வருகின்றன.

மேலும், தேரோடும் முக்கிய 4 ரத வீதிகளைச் சீரமைத்தல், லட்சக்கணக்கில் திரளும் பக்தர்களுக்கான பாதுகாப்பு கட்டமைப்புகள், தற்காலிக நிழற்குடைகள் மற்றும் தடையற்ற குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றன. இத்தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory