» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசின் 10 லட்சம் கோடி கடன் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஞாயிறு 10, மே 2026 11:28:51 AM (IST)



தமிழக அரசு தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. கஜானாவை முழுவதுமாக வழித்து வைத்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ள நிலையில்தான் இந்தப் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம் என்று தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய் கூறினார். 

தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு. விஜய், தனது முதல் உரையை "என் நெஞ்சில் குடியிருக்கும்..." என்ற தனது டிரேட்மார்க் வாசகத்துடன் தொடங்கி, தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் தனது எதிர்காலச் செயல்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

"நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. ஒரு சாதாரண உதவி இயக்குநருக்கு மகனாகப் பிறந்து, சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவன். எனக்கு வறுமை என்றால் என்ன, பசி என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, அண்ணன் - தம்பியாக என்னை நினைத்ததால்தான் இன்று இந்த இடத்தை எனக்குக் கொடுத்துள்ளீர்கள்."

சினிமாவில் தனக்குக் கிடைத்த உச்சபட்ச புகழை விட்டுவிட்டு, மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே அரசியலுக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தனக்காக அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொண்ட தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

நிதிநிலை குறித்த 'வெள்ளை அறிக்கை:

தமிழகத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்துப் பேசிய முதல்வர் விஜய்: "தமிழக அரசு தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. கஜானாவை முழுவதுமாக வழித்து வைத்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ள நிலையில்தான் இந்தப் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். உள்ளே சென்று பார்த்தால்தான் எதார்த்த நிலை புரியும். விரைவில் அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்."

"மக்களைச் சந்திக்க வேண்டுமென்றால் நான் முகத்தை மூடிக்கொண்டோ அல்லது மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். எதையும் வெளிப்படையாகச் செய்வேன். என்னால் எது சாத்தியமோ அதை மட்டுமே வாக்குறுதியாகக் கொடுப்பேன்; கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

சுமக்க முடியாத கடன் சுமை இருந்தாலும், கோடிக்கணக்கான மக்களின் அன்பு தன்னுடன் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக, 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 'சிங்கப்பெண்' பாதுகாப்புப் படை ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த முதல் உரை, அவர் ஒரு வெளிப்படையான மற்றும் அதிரடி மாற்றங்களைக் கொண்ட ஆட்சியைத் தரப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory