» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுவன் வெட்டிக் கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:51:56 AM (IST)



கோவில்பட்டியில் சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகன் மனோஜ் குமார் (17). நேற்று இரவு மனோஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை நோக்கிப் பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.

கும்பலைக் கண்டு அங்கிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், எதிர்பாராதவிதமாக மனோஜ் மட்டும் தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல், மனோஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனோஜின் மரணச் செய்தி கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யக் கோரி, இன்று காலை கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். "குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். 

கொலைக்கு காரணம் என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மனோஜ் குமாரின் நண்பர் பூவரசனுக்கும், ஹரீஷ் என்பவருக்கும் இடையே பள்ளிப் பருவத்தில் படிக்கும்போது வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய நான்கு சிறுவர்களையும் பிடிப்பதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பள்ளிப் பருவ மோதல் ஒரு இளைஞரின் உயிரைப் பறித்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

முட்டாள்Feb 27, 2026 - 03:19:39 PM | Posted IP 162.1*****

VAO கொலை முதல் பழைய குற்றவாளிகளை தூக்குத் தண்டனை கொடுக்காததே எல்லா கொலைக்கு கரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory