» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளச்சல் நகராட்சி பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
செவ்வாய் 9, ஜூலை 2024 5:51:46 PM (IST)
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், இன்று (09.07.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடன்குடன் நிவர்த்தி செய்ய வேண்டுமென அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்று குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் கோரிக்கையினை நிவர்த்தி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் குளச்சல் துறைமுக தெருவில் பழுதடைத்த சாலையினை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் குளச்சல் துறைமுகதெருவினை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சாலையினை விரைந்து அமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாம்புரி வாய்க்கால் பகுதியினை தூர்வார்வது குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. மேலும் குளச்சல் கே.எஸ்.எஸ் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளச்சல் பேருந்து நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் துறை அலுவலர்கள் மற்றும் வியாபாரி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டதோடு, குளச்சல் பங்கு பேரவை சார்பாக அளிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.ஆய்வுகளில் குளச்சல் நகராட்சி ஆணையர் செந்தில், பொதுப்பணித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.