» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் உப்பளங்கள் நீரில் மூழ்கின: உற்பத்தியாளர்கள் கவலை

வெள்ளி 17, மே 2024 8:50:58 AM (IST)

தூத்துக்குடியில் கோடை மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உப்பளங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன. மழையால் சேதம் அடைந்த உப்பளங்களை மீண்டும் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த பணிகள் முடிவடைய சுமார் 3 மாதங்கள் வரை ஆகி உள்ளது.

இதனால் வழக்கமான காலகட்டத்தில் உப்பு உற்பத்தி தொடங்கவில்லை. தாமதமாக சில உப்பளங்களில் ஏப்ரல் மாத இறுதியில் தான் உப்பு உற்பத்தி தொடங்கியது. இதிலும் தரமான உப்பு இன்னும் வரவில்லை. இந்த வாரத்தில் முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. அதே போன்று சேகரித்து குவித்து வைக்கப்பட்டு இருந்த உப்பும், மழையால் கரைந்து காணப்படுகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறும் போது, ‘உப்பு உற்பத்தி ஏற்கனவே தாமதமாக தொடங்கியது. இன்னும் முழுவீச்சில் உற்பத்தி நடைபெறாத நிலையில், கோடை மழை மீண்டும் உப்பு உற்பத்தியை பாதித்து உள்ளது. இந்த மழையால் கரையில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த உப்பும் கரைந்து உள்ளன. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால், 10 நாட்களில் உப்பு உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது. கோடை மழைநீடித்தால் உப்பு உற்பத்தி மேலும் பாதிக்கப்படும்’ என்று தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து

கடவுளேமே 17, 2024 - 07:55:45 PM | Posted IP 162.1*****

காப்பாத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory