» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!

சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டிய நிலையில், அவர் டெல்லி போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டுச் சாஃப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படியும் அத்தியாவசிய மருத்துவச் சிகிச்சைக்காகச் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாஃப்டர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனம் வாங்சுக் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலின் முக்கிய அவயங்களின் செயல்பாடுகள் சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ, குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் அனுமதியின்றி அவருக்கு வாய்வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எந்தவொரு சிகிச்சையையும் அளிக்கக் கூடாது எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அபிஜித் தீப்கே உண்ணாவிரதம்:

சோனம் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக் குழுவைச் சேர்ந்த அபிஜித் தீப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், ஜூலை 20-ம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கிய அமைதிப் பேரணி நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் டெல்லி போலீஸார் ஊடகங்களைத் தடுத்துச் சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ் மற்றும் சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் ஆகியோர் இநடவடிக்கைக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory