» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளா முழுவதும் கோடை வெயில் துவங்கியது: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 12:00:53 PM (IST)
கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதங்கள் கேரளாவில் கோடை காலமாகும். இந்த மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இந்த காலத்தில் கோடை மழையும் பெய்யும் என்பதால் வெப்ப நிலை ஓரளவு தணிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்திலேயே கேரளா முழுவதும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணுார், பாலக்காடு, புனலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக 37 டிகிரி செல்சியஸ் (98.6 பாரன்ஹீட்) வெப்பநிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் கண்ணுார் விமான நிலையத்தில் அதிகபட்சமாக 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்போது நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணுார் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.