» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு மார்க் அள்ளி வீசிய பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!!
சனி 27, ஏப்ரல் 2024 3:56:04 PM (IST)
உத்தரப் பிரதேசத்தில் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களை அள்ளிவீசிய பேராசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.யின், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இயக்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்றுவரும் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருந்தியல் துறை டிப்ளமோ படிப்பிற்கான தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. தேர்வெழுதிய மாணவர்களில் 4 பேர் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என்றும் சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் விடைத்தாள் முழுவதும் எழுதிவைத்தனர்.
இந்த நிலையில், விடைத்தாள்களைத் திருத்திய பேராசிரியர்கள் இருவர், ஜெய்ஸ்ரீராம் என்று எழுதிய நான்கு மாணவர்களுக்கும் 50 சதவீத மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக, பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரான ஆனந்தி பென்னிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஐ மூலம் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அதில், தேர்வு வினாத்தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதியிருப்பதும், அவர்கள் நான்கு பேருக்கும் 50 சதவீத மதிப்பெண்கள் அளித்திருப்பதும் வெட்ட வெளிச்சமானது.
இதையடுத்து, நான்கு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. தேர்வெழுதிய 4 மாணவர்களும் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்ததையடுத்து, விடைத்தாளைத் திருத்திய பேராசிரியர்கள் இருவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.