» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு: ரஜினி, கமல் இரங்கல்

புதன் 13, அக்டோபர் 2021 10:53:46 AM (IST)



பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு வயது 82. அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீகாந்த். இவரின் இயற்பெயர் வெங்கட்ராமன். அழகும் துடிப்புமிக்க இளைஞரான இவர், அரசுப்பணியில் நல்ல பொறுப்பில் வேலையில் இருந்தார். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகங்களின் பக்கம் இவரின் கவனம் செல்ல, அங்கே அறிமுகமானார் இயக்குநர் கே.பாலசந்தர்.

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல், கவிஞர் வாலியுடனும் நாகேஷுடனும் நல்ல நட்பில் இருந்தார். எல்லோரும் ‘வாடாபோடா’ நண்பர்களாகத் திகழ்ந்தார்கள். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’ என தொடர்ந்து தன் படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தார் பாலசந்தர். அதேபோல், இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டராக, மிகவும் ஸ்டைலாக, கெத்தாக நடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த்.

1965-ம் ஆண்டு ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர் நீச்சல்', 'பாமா விஜயம்', 'தங்கப்பதக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். ரஜினி நாயகனாக நடித்த முதல் படமான 'பைரவி'யில் வில்லனாக நடித்தவர் ஸ்ரீகாந்த் என்பது நினைவுகூரத்தக்கது.

‘வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த்.

சென்னையில் வசித்து வந்த ஸ்ரீகாந்த் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று மீண்ட நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல் தனது ட்விட்டர் பதிவில், "கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory