» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மில்லர் - அக்சர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!

செவ்வாய் 12, மே 2026 12:22:26 PM (IST)

தர்மசாலாவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  கேப்டன் அக்சர் படேல் மற்றும் மில்லரின் அதிரடி ஆட்டம் டெல்லியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 56 ரன்கள் (2 பவுண்டரி, 6 சிக்ஸர்) குவித்தார். ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார்.

நடுவரிசையில் ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக விளையாடி 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டாய்னிஸ் மற்றும் சஷாங்க் சிங்கை அவுட்டாக்கினார். இருப்பினும் சூர்யான்ஷ் ஷெட்கேவின் அதிரடியால் ஸ்டார்க்கின் ஹாட்ரிக் கனவு தகர்ந்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.

211 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 9 ஓவர்களில் 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அபிஷேக் போரல், ராகுல், ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இக்கட்டான நிலையில் களம் புகுந்த கேப்டன் அக்சர் படேல், 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அணியை மீட்டெடுத்தார்.அவருக்குத் துணையாக ஆடிய 'கில்லர்' மில்லர் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் அஷுதோஷ் சர்மா (24), மாதவ் திவாரி (18*) மற்றும் அகிப் நபி (10*) ஆகியோர் அதிரடி காட்ட, டெல்லி அணி 19 ஓவர்களிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

பவர்பிளேவுக்குள் (முதல் 6 ஓவர்) 3 முறை 50+ ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரியான்ஷ் ஆர்யா பெற்றார். முதலிடத்தில் வைபவ் சூர்யவன்ஷி (4 முறை) உள்ளார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே 3-வது முறையாக சிக்ஸர் அடித்து, ஜெய்ஸ்வாலுக்கு (4 முறை) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிரியான்ஷ் பிடித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory