» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

வெள்ளி 31, அக்டோபர் 2025 5:28:52 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணாவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷுப்மன் கில் (5 ரன்கள்), சஞ்சு சாம்சன் (2 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (ஒரு ரன்), திலக் வர்மா (0 ரன்), அக்‌ஷர் படேல் (7 ரன்கள்), ஷிவம் துபே (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஹர்ஷித் ராணா 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட், 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் எல்லிஸ் மற்றும் சேவியர் பார்ட்லெட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் 20 ரன்களும், மிட்செல் ஓவன் 14 ரன்களும் எடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory