» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்: எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!

செவ்வாய் 16, ஜூன் 2026 4:05:11 PM (IST)


தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜிநாமா செய்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டு பிரிவுகள் உருவாயின. எஸ்.பி. வேலுமணி அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த சி. விஜயபாஸ்கர், பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்த பின்னரும் இபிஎஸ் தலைமையுடன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இதற்கிடையே அதிமுகவின் ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 எம்எல்ஏக்கள் ஏற்கனவே தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர். இந்த வரிசையில் ஐந்தாவது நபராகத் தற்போது சி. விஜயபாஸ்கரும் இணைந்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியிலும், தொகுதி மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுப்பதாகக் கூறி வந்த அவர், இன்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்துத் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

விஜயபாஸ்கரின் ராஜிநாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த கடிதம் விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிநாமாவிற்கான பின்னணி:

எடப்பாடி பழனிசாமியிடம் விஜயபாஸ்கர் மன்னிப்புக் கடிதம் கொடுத்த பிறகும், இருவருக்கும் இடையே நீடித்து வந்த கடுமையான கருத்து வேறுபாடே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி நீண்ட நாட்களாகியும் அவருக்குத் திருப்பி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படுகிறது. இதனால் இபிஎஸ்-க்கு எதிராகத் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.

கரோனா பேரிடர் காலத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகத் தீவிரமாகப் பணியாற்றிய சி. விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ள அவர், முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவில் இணையவுள்ளதாகத் தீவிரத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory