» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)



தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டிகள், கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி வளாகங்களில் உள்ள தேவையற்றப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த மேயர் உத்தரவிட்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டில் 100 மாணவர்களுடன் இருந்த பள்ளிகளில், தற்போது 900 முதல் 1200 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் கீழ் உள்ள 20 பள்ளிகளும் (தொடக்கப்பள்ளி 8, நடுநிலைப்பள்ளி 11, மேல்நிலைப்பள்ளி 1) தற்போது திறப்பதற்கு முழுமையாகத் தயாராக உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்துப் பயனடைய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், கவுன்சிலர் மும்தாஜ், பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் மேயர், ஆணையரின் நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory