» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து, இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இக்கூட்டத்தை நடத்த முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையான அதிகாரம் கொண்ட அரசுகள் அமையாத சூழலில், காவிரி போன்ற வாழ்வாதாரப் பிரச்சினையில் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மண்ணின் உரிமைகளுக்காகவும் மக்களின் உணர்வுகளுக்காகவும் எப்படி வலுவாகக் குரல் கொடுப்பார்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவிருக்கும் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதர மூன்று மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், இக்கூட்டம் ஒருபக்கச் சார்பாக மாறி கர்நாடகாவிற்குச் சாதகமாக முடிந்துவிடும் என்று சீமான் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், "யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக இக்கூட்டம் கூட்டப்படுகிறது? இது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் மற்றும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுகள் இணைந்து நடத்தும் கூட்டுச் சதியோ என்ற சந்தேகம் எழுகிறது. கச்சத்தீவு போலத் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் வரலாற்றுத் துரோகங்களை இனியும் அனுமதிக்க முடியாது" என்றும் அவர் சாடியுள்ளார்.

எனவே, மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளிவந்து, புதிய அரசுகள் பொறுப்பேற்ற பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சீமான் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory