» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 12:09:26 PM (IST)
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படப்போவதாகவும், அவற்றின் விலை அதிரடியாக உயரப்போவதாகவும் பரவிய வதந்தியால், தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் நிலவியது.
தற்போது நிலவி வரும் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால், சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவானது.
இதன் எதிரொலியாக, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் விடுதிகளுக்குச் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய கையிருப்பு இல்லாத சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளன; சில உணவகங்கள் விறகு அடுப்பு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, "நாளை முதல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் மற்றும் விலை கணிசமாக உயரும்" என்ற வதந்தி புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், நள்ளிரவிலும் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களை முற்றுகையிட்டனர்.
சென்னை, வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. பலர் கேன்கள் மற்றும் பாட்டில்களிலும் எரிபொருளை வாங்கிச் சென்றதால், செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
இந்த நிலை குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி. முரளி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "நாடு முழுவதும் சுமார் 90 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை. எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு வழங்கி வந்த கடன் வசதியை மட்டுமே நிறுத்தியுள்ளன; விநியோகத்தை நிறுத்தவில்லை. பொதுமக்கள் தேவையில்லாமல் அதிக அளவில் எரிபொருளைச் சேமிக்க முயன்றால், அதுவே தேவையற்ற செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கிவிடும். வதந்திகளை நம்ப வேண்டாம்." என்றார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 13, மார்ச் 2026 4:14:42 PM (IST)

உடன்குடியில் புதிய அனல் மின் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:31:44 PM (IST)

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

