» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகளையில் ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

சனி 10, ஜனவரி 2026 11:54:54 AM (IST)


சிவகளை ஊராட்சியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை கனிமொழி எம்பி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கால்வாய் ஊராட்சியில், இன்று (10.01.2026) சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயநலக்கூடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் அவர் தெரிவித்ததாவது :உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த சமுதாயநலகூடத்தை கட்டி இன்று திறக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த பகுதியில் இச்சமுதாயநலக்கூடம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்கள். அவர்களுடைய கருத்திற்கிணங்க, சமூக பொறுப்பு நிதியிலிருந்து இந்த சமுதாயநலக்கூடம் மிக அழகாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்று ஒன்றாக நிறைவேற்றிக் தந்து கொண்டிருக்கின்ற முதலமைச்சர் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வழங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்த நேரத்தில் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லக்கூடிய தருவாயில், நமது தமிழ்நாடு முதலமைச்சர் மகிழ்ச்சியான பொங்கலாக மாற்றியிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரொக்கம் ரூ. 3000/- மற்றும் தரமான பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் திருவிழாவிற்கான பொருட்களை எல்லாம் நமது அரசு வழங்கி கொண்டிருக்கின்ற மகிழ்ச்சியான நேரத்திலே இருந்து வருகிறோம்.

இவ்வாறு மக்களுக்கு தந்திருக்க கூடிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி, அதேநேரத்தில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவியர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை நமது பள்ளி மாணாக்கர்களுக்காக உருவாக்கி வருகின்ற ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் , நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கால்வாய் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி –IIன் கீழ் ரூ.13.16 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொதுவிநியோக கடையினை திறந்து வைத்து பொங்கல் ரொக்கப் பரிசு ரூ. 3000/-, பரிசு தொகுப்பு, இலவச வேட்டி சேலை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், மணக்கரை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டள்ள சமுதாயநலக்கூடத்தினையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னதாக, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், சிவகளை ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், சிவகளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ. அமிர்தராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன், இணைப்பதிவாளர் (கூட்டுறவுச்சங்கங்கள்) ராஜேஷ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory