» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தும் திமுக அரசு : அண்ணாமல் சாடல்!

வியாழன் 30, அக்டோபர் 2025 5:43:35 PM (IST)

தமிழக பள்ளிக்கல்வித் துறை மிகவும் பின்தங்கியில் இருக்க, திமுக அரசு  வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் (UDISE+) அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.

2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. 

கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.

இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory