» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. ஆட்சியில் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!- அண்ணாமலை

சனி 4, மே 2024 4:27:31 PM (IST)

காங்கிரஸ் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, தி.மு.க. ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.பி. ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து ஜெயக்குமார் சென்றதாகவும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த சூழலில் கே.பி. ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக இன்று மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் ஜெயகுமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில், "காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

கடந்த ஏப்ரல் 30ம்தேதி அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, தி.மு.க. ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory